FIFA world cup FIFA facebook
விளையாட்டு

'FIFA உலகக் கோப்பையை காண்பது இந்தியர்களின் உரிமை!'- நீதிமன்றம் சென்ற பிரச்னை

எம். குமரேசன்

2026ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் ஜூன் 11ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு , சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், உலகின் மக்கள் தொகை மிகுந்த இரு நாடுகளில் 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரை ஒளிபரப்புவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீனாவில், அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நிறுவனத்துக்கும் டி.வி உரிமம் வழங்கப்படவில்லை. 2026, 2030 உலகக் கோப்பை போட்டி தொடர்களை ஒளிபரப்ப ஃபிஃபா தரப்பில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான உரிமத்தை எடுக்க ரிலையன்ஸ் நிறுவனம் முயன்றது. ஆனால், அதிக ஏலத் தொகை காரணமாக போட்டிக்கான உரிமத்தை வாங்க முடியவில்லை.

தற்போது, ஃபிஃபா 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்கிறது. ஆனால், இதற்கும் இந்தியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. போட்டிகள் வட அமெரிக்க கண்டத்தில் நடப்பதால் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில்தான் இந்தப் போட்டிகள் ஒளிபரப்பாகும். அதாவது, முதல் போட்டியே நள்ளிரவு 12.30 மணியளவில்தான் தொடங்கும். இதனால், விளம்பரங்கள் பெறுவதில் பெரும் சிக்கல் இருப்பதால், உலகக் கோப்பை தொடருக்கான உரிமத்தைப் பெறுவதில் இந்திய தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அரசியலமைப்பின் 226-வது பிரிவின் கீழ் வழக்கறிஞர் அவ்தேஷ் பைர்வா என்பவர் ரிட் மனு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில்,

மேலும், 2007-ஆம் ஆண்டின் விளையாட்டு ஒளிபரப்பு சட்டத்தின் கீழ், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 'தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 14, 19(1)(a) மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரைக் காண இந்தியர்கள் உரிமை பெற்றவர்கள். இந்தியர்கள் போட்டியைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கடமை அரசுக்கு உண்டு. ஒளிபரப்பை உறுதி செய்யத் தவறினால், குடிமக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷைந்திர குமார் கௌரவ் உரிய விளக்கமளிக்க பிரசார்பாரதி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் எம். சத்யநாராயண் கூறுகையில், ''இந்தியா கால்பந்து விளையாட்டுக்கு மிகப் பெரிய சந்தை. எனவே, ஃபிஃபா இந்தியாவை முற்றிலும் புறக்கணித்து விட முடியாது. எங்களால் வர்த்தக உரிமையில் நேரடியாகத் தலையிட முடியாது. கத்தார் உலகக் கோப்பைத் தொடரை, போட்டிக்கே தகுதி பெறாத இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று கண்டு களித்தனர். விளம்பரம் பெறுவது , தொழில்நுட்பப் பணிகளுக்கான காலம் மிக குறுகியதாக உள்ளது. உலகின் மிகப் பெரிய விளையாட்டுச் சந்தையான இந்தியாவைக் கருத்தில் கொண்டு ஃபிஃபா மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் சமரசத்துக்கு வரலாம்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1982 ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடர் முதன்முதலில் இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. அப்போது, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மட்டுமே ஒளிபரப்பானது. பின்னர், 1986ம் ஆண்டு முதல் முழு உலகக் கோப்பைத் தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. 42 ஆண்டுகளில் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதன்முறை!