கால்பந்துக் களத்தில் மைல் கல்லை அமைத்து ஆண்டாண்டு காலம் அதன் எல்லையை விரிவுபடுத்தியும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் பிரேசிலின் கால்கள் எங்கே என்று கேட்கும் விதமாக அமைந்தது பிரேசில் நார்வே அணிகளுக்கிடையே நடந்த போட்டி.
கால்பந்து என்ற விளையாட்டு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அந்த விளையாட்டை அழகுணர்ச்சி பொங்கும் ஆட்டமாக மாற்றியவர்கள் தென் அமெரிக்கர்கள்.
ஐரோப்பியா காலனித்துவ நாடுகள் அறிமுகப்படுத்திய கால்பந்து நாளடைவில் தென் அமெரிக்கர்களின் ஊனோடும் குருதியோடும் கலந்த விளையாட்டாக மாறியது.
தென் அமெரிக்க நாடுகளின் வீதிகள் கால்பந்துக் களங்களாகின. ஒழுங்குபடுத்தாத சாலைகளிலும் தெருக்களிலும் ஆடும்போது கால்பந்து கிளப்பிய புளுதித் துகள்களிருந்துதான் மின்னும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் பலர் இந்த உலகத்திற்கு அறிமுகமானார்கள்.
கால்பந்து ஆட்டத்தில் நகரும் கால்கள் ஒரு சேர்ந்திசைப் பாடலுடன் கூடிய நடனம் போல்தான் இருந்தன. முன் பின் நடு என்று களம் பிரிந்து கிடந்தாலும் அவற்றில் நிலையெடுத்து ஆடும் ஒரு கூட்டாட்டத்தின் தொகுப்பாக இருக்கும் என்பதே தென் அமெரிக்கர்களின் ஆட்டத்தின் சிறப்பு ஆகும்..
அப்படியான ஒரு கால்பந்து கலாச்சாரத்தைப் பேணி பாதுகாத்த நாடுகளில் ஒன்றான பிரேசில் அதன் பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதைப் போன்ற உணர்வை இன்றைய ஆட்டம் ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் சிறப்பான கூறுகளை இழந்த நாலாந்திர ஆட்டமாகவே நார்வேக்கு எதிராக அமைந்தன.
நார்வே அணியினர் தொடக்கம் முதலே ஆட்டக் களத்தைத் தங்கள் காலடிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
அவர்களிடமிருந்து பந்துகளை மீட்பதே பிரேசிலுக்குப் பெரிய சவாலாக மாறிவிட்டது. இருந்தாலும் கிடைத்த பல வாய்ப்புகளை கோலாக மாற்றுவதற்காகக் கால்கள் சரியான தாளகதிக்குள் அடங்காமல் போனதால் முன்களம் பிசுபிசுத்துக் காட்சியளித்தது. .
இப்படியான பறிப்புகளுக்கிடேயே நல்வாய்ப்பாக வாய்த்த தண்டக்கோலும் இரண்டகம் செய்ய பிரேசிலின் பின்னடைவு அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கியது.
பின்பாதி ஆட்டத்தில் என்டிரிக்கின் வருகையை அடுத்து சுணங்கிக்கிடந்த களம் சற்று சுறுசுறுப்பானது. ஆனாலும் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. வினி என்டிரிக்குக்கு வசமாகத் தொடுத்துக் கொடுத்த பந்தும் பழமாகாமல் போயிற்று.
நெய்மரின் வருகை பலமளிக்கலாம் என்று பார்வையாளர் மாடத்தில் ஆரவாரம் எழுந்தாலும் அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக நார்வேயின் ஹாலன்ட் அடுத்தடுத்த போட்ட இரண்டு கோல்கள் பிரேசிலின் காலின் கீழே வெற்றி நழுவிச் செல்வதை எடுத்துக்காட்டின.
பிரேசில் மக்களின் நெஞ்சத்துடிப்பான நெய்மருக்காகக் களம் கடைசியாகக் கொடுத்த கோலோடு ஆட்டம் மூன்றுக்கு இரண்டு என்ற நிலையில் நார்வே பக்கமாகச் சாய்ந்தது.
பிரேசில் அணிக்குக் கால்பந்துக் களம் பல கோப்பைகளையும் புகழையும் அள்ளிக்கொடுத்திருக்கிறது. களத்தை இழக்கும்போதெல்லாம் அவர்கள் சிந்தும் கண்ணீருக்குப் பிறிதொரு களம் விடையளிக்கக் காத்திருக்கிறது.
நெய்மர் என்ற உதையப்பனின் கால்கள் ஓயலாம். ஆனால் அதன் ஓட்டம் தலைமுறை தாண்டியும் தொடரும் என்பது பிரேசிலின் சிறப்பு. அதேசமயத்தில் நட்சத்திர வீரர்கள் மேல் மட்டுமே நம்பிக்கையைக் குவித்து வெற்றி பெற்றுவிடலாம் என்று அணியும் அந்த நாடும் நினைப்பது கூட்டு முயற்சிக்கு எதிரானதாகும்.
பிரேசிலின் பாரம்பரியக் கால் களியை எதிர்காலம் தூசு தட்டி எடுத்துவிடும் என்று நம்பலாம்.
இன்றைய மற்றொரு போட்டியில் காலிறுதிக்கான வாய்ப்பை மெக்சிகோவும் இழந்து நிற்கிறது.
பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் ஆட்டத்தை ஒப்பிடுகையில் ஆட்டம் முடியும் வரைக்கும் மெக்சிகோ களத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தது உண்மை.
மெக்சிகோ தனது சொந்த மண்ணில் சுமார் 80000 இரசிகர்களின் முன்னிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆடியது.
ஆனாலும் முன்பாதியில் முப்பது நிமிடங்களில் பெல்லிங்கம் அடுத்தடுத்து போட்ட இரண்டு கோல்கள் இங்கிலாந்துக்கு பலமான அடித்தளத்தை போட்டுக்கொடுத்துவிட்டன.
இந்த இரண்டு கோலுக்கும் சடுதியில் விடையளிக்கும் விதமாக குய்னோனசின் பதிலுதை இருந்தாலும் கெய்னுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு இறுதியாக மெக்சிகோவுக்குக் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பைப் பற்றிய கவலையை அளிக்கவில்லை.
இறுதியாக மெக்சிகோவின் காலிறுதிக் கனவு கரைந்து போயிற்று.
மதங்கள் அனைத்தும் தங்களின் தத்துவங்களையும், ஒழுக்க நெறிகளையும் வெறும் சட்டங்களாகவும், விதிகளாகவும் தந்திருந்தால் அவை இவ்வளவு காலம் நிலைத்திருந்திருக்க முடியாது. பிரபஞ்சம் எப்படி உருவானது, மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கிறது போன்ற, மனிதனால் விடை காண முடியாத கேள்விகளுக்கு மதங்கள் சுவாரசியமான கதைகள் மூலம் விடையளித்தன. மனிதர்களின் அடிப்படைச் சிக்கல்களான பயம், பாதுகாப்பு, உணவு போன்றவற்றை, கடவுள், பாவம், புண்ணியம் போன்றவற்றோடு கதைகள் இணைத்தன. அவர்களை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் வைத்திருக்க, நன்மைக்கும் தீமைக்குமான போர், தியாகம், முக்தி போன்ற உணர்வுப்பூர்வமான கதையாடல்கள் உதவுகின்றன. தர்க்க ரீதியான உண்மைகளை விட இந்தக் கதைகள் தரும் மன அமைதியே மனிதர்களை மதத்தோடு பிணைத்து வைக்கிறது.
சினிமா:
திரையரங்கம் என்பது மனிதர்கள் தங்களின் எதார்த்த வாழ்க்கையை மறந்து, இரண்டு மணி நேரம் ஒரு கதையைப் பார்த்து அழும், சிரிக்கும் ஒரு மாயாஜாலமான இடம். சினிமாவில் லாஜிக் (Logic) மீறப்படும்போது கூட, மேஜிக் (Magic) வேலை செய்கிறது. காரணம், இயக்குநர்கள் நம்முடைய ஆழ்மன ஆசைகளையும், அச்சங்களையும் தொடும் கதைகளைத் திரையில் காட்டுகிறார்கள். திரையில் ஒரு நடிகர் செய்யும் அதிரடிக் காரியங்களை நிஜ வாழ்விலும் அவரால்தான் செய்ய முடியும் என்று நம்பி, அவருக்குப் பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் செய்வது இந்தக் 'கதை மயக்கம்' தான்.
தொழில்:
இன்றைய சந்தையில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை விற்கும் காலத்தைக் கடந்துவிட்டன. அவை இன்று தங்களின் கதைகளை விற்கின்றன. ஒரு கார் விளம்பரம் செய்யப்படும்போது அதன் எஞ்சின் திறனோ, தொழில்நுட்பங்களோ காட்டப்படுவதில்லை. மாறாக, ’இந்தக் காரை ஓட்டினால் நீங்கள் சமூகத்தில், நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள்’ என்று சொல்லப்படுகிறது. ஒரு சோப்பை விற்கும் விளம்பரங்கள், அதன் வேதியியல் தன்மையை விளக்குவதில்லை. மாறாக, ’இந்தச் சோப்பைப் பயன்படுத்தினால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்’ என்கிறார்கள். இவையெல்லாம் நமது உணர்ச்சிகளோடு விளையாடக்கூடிய கதைகள். ஆப்பிள் (Apple) மொபைலையோ அல்லது நைக் (Nike) காலணியையோ வாங்கும்போது நாம் அவற்றை வெறும் பொருளாக நினைப்பதில்லை. நம் கௌரவம் உயர்ந்துவிட்டதாகக் கருதுகிறோம்.
அரசியல் களம்:
’ஒரு சாமானியன் எப்படிப் போராடி, தடைகளை உடைத்து, மக்களின் இரட்சகனாக மாறினான்’ என்ற கதைதான் வரலாற்றில் பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. மக்கள் தங்களின் தனிப்பட்ட ஏமாற்றங்களுக்கு இந்த நாயக பிம்பக் கதைகளில் வடிகால் தேடுகிறார்கள். ஒரு நல்ல கதைக்கு ஒரு வலுவான வில்லன் தேவை. அரசியலில் ’அவர்கள் நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள், நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்’ என்ற கதையாடல் (Narrative) உண்மையான வளர்ச்சி குறித்த விவாதங்களை விட மிக எளிதாகத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற்றுத் தந்துவிடுகிறது.
நம் மூளை, தனித்தனியாக இருக்கும் தரவுகளை (Raw Data) நினைவில் வைத்துக் கொள்ளச் சிரமப்படுகிறது. அதே தரவுகளைக் காரண-காரியம் (Cause and Effect) கொண்ட ஒரு கதையாக மாற்றும்போது, அதை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது. உதாரணமாக, ’பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது’ என்பதை விட, ’ஒரு குறிப்பிட்ட நபரின் சூழ்ச்சியால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது’ என்ற கதை நமக்குத் திருப்தி அளிக்கிறது.
ஆனால், கதைகளால் கட்டப்படும் மாயைக்குள் சிக்கிக்கொண்டால், எதார்த்தமான உண்மைகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். அரசியல்வாதிகள் விற்கும் கதைகளையும், பிராண்டுகள் காட்டும் மாயைகளையும், சினிமா மற்றும் மதங்கள் உருவாக்கும் பிம்பங்களையும் தர்க்க ரீதியாக அணுகக் கற்றுக்கொள்ள வேண்டும். கதைகளை ரசிப்போம்; கதைகள் உலகை அழகூட்டுகின்றன, மனிதர்களின் சிந்தனையை மேம்படுத்துகின்றன, அனுபவங்களை அளிக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கதைகள் வேறு, கதை மயக்கம் வேறு! உண்மைகளைத் தரவுகள் மற்றும் ஆய்வுகளின் வழியே மட்டுமே நம்புவோம் என்ற விழிப்புணர்வே இந்தக் 'கதை மயக்கத்திலிருந்து' நம்மைப் பாதுகாக்கும்!