

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் லோட்டஸ் வுமன் கேர் மருத்துவமனை ஆகியவை இணைந்து, பெண்களுக்கான பிரத்யேக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை கோவையில் நடத்தின.
அவிநாசி சாலை, அரசூர் பகுதியில் அமைந்துள்ள KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 'ஆரோக்கியம்' என்ற தலைப்பில் இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் லோட்டஸ் PCOS சித்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டாக்டர் உஷா நந்தினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தற்காலப் பெண்களுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள மாதவிடாய் காலப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும், துரித உணவு கலாச்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள், சரியான உணவுப் பழக்கவழக்கங்களின் அவசியம் மற்றும் அதீத தொழில்நுட்பப் பயன்பாடு பெண்களின் மனநலனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது குறித்தும் அவர் மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தக் கருத்தரங்கில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியில், மாணவிகள் தங்கள் உடல்நலம் சார்ந்த சந்தேகங்களை மருத்துவரிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவு பெற்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி இளம் பெண்களை வழிநடத்தும் ஒரு பயனுள்ள நிகழ்வாக இது அமைந்தது.