பார்த்தாலே பற்றிக்கொள்ள வைக்கும் விளையாட்டுக்கள் எக்கச்சக்கமாக இருக்க இந்த இந்தியர்களும், தமிழர்களும் கிரிக்கெட்டை மட்டுமே பிடித்துவைத்துக் கொண்டாடிக் கொண்டிருப்பது, சமயங்களில் அயர்வூட்டும் செயலாகத்
தோன்றுவதுண்டு.
சமீபத்தில் கண்ணில் பட்ட செய்தி ஒன்று, நமது ஆர்வத்தைப் பெரிதாகத் தூண்டியது. அது வரும் நவம்பரில் போர்சுகல் தேசத்தில் நடக்கவிருக்கும் World Beach Ultimate Championship எனும் உலகளாவிய Frisbee விளையாட்டு! அதற்கு இந்தியாவிலிருந்து ஒரு பெண்கள் அணி செல்கிறது, 16 பேர் கொண்ட அந்தக் குழுவில் 5 பேர் தமிழ்ப் பெண்கள்! அதிலொருவர் நடிகை காயத்ரி!
விஜய் சேதுபதியுடன் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தில் ரசிகர்களால் கவனம் பெற்ற நடிகை காயத்ரி சங்கர், தற்போது DNA வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது இந்த Frisbee பக்கம் ரசிகர்கள் பலருமே அறியாதது.
WFDF (World Flying Disc Federation) எனும் அமைப்பு இந்த ஃப்ரிஸ்பீ
(பறக்கும் தட்டு) விளையாட்டுகளை உலகளாவிய அளவில் வருடம் தோறும் நடத்தி வருகிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் இருபாலர் கலந்துகொள்ளும் இந்த விளையாட்டு வகைகளுள், பெண்கள் கலந்துகொள்ளும் உலகப்போட்டி WBUC (World Beach Ultimate Championship) தான் போர்ச்சுகலில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கிறது. இதில் கலந்துகொள்ளப் போகும், இந்திய ஃப்ரிஸ்பீ அணியில்தான் நடிகை காயத்ரி உட்பட 5 தமிழ்ப் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை, இவர்களை அடையாளம் கண்டு இவர்களுக்கு வேண்டிய வசதிகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளை ஏற்றுக்கொண்டு ஊக்குவித்திருக்கிறது.
ஒரு புதிய விளையாட்டில் ஈடுபடுவதும், அதில் உயரம் தொடுவதும் சாதாரணமான காரியமே இல்லை. குடும்பமோ, நண்பர்களோ, வேறெந்த அமைப்புகளோ உங்களுக்கு உதவவும் மாட்டார்கள், உறுதுணையாக இருக்கவும் மாட்டார்கள். அரசாங்கமே கூட உங்களைக் கண்டு கொள்ளாது. மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எல்லாவற்றையும் மீறி வருங்கால சந்ததிக்குத் தேவையான சாலையைப் போட முயலுவதுதான் இதன் முக்கியமான பலன். அந்த வகையில் இத்தகைய முயற்சிகள் பெரும் போற்றுதலுக்கு உரியவையாகும்.
1983ல் கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் டீம் உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடச்சென்றது. அப்போது தங்குமிட வசதி, உணவு, போய்வரச் செலவு போன்ற அடிப்படை வசதிகளுக்குக் கூட அவர்கள் போராட வேண்டியதாயிருந்தது. இன்று அதே கிரிக்கெட் பிளேயர்கள் தங்கத் தட்டில் வைத்துக் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள், பாதுகாக்கப் படுகிறார்கள். இதுதான் ஒரு துறையின் முன்னோடிகளுக்கும், பின்னால் வந்து அதன் பலனை அனுபவிப்பர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
2000க்குப் பின்பாக, கிரிக்கெட்டையும் தாண்டி உலகளாவிய அளவில் புகழ்பெற்ற மோட்டார்ஸ்போர்ட்ஸ், அலைச்சறுக்கு, ஃபிரிஸ்பீ போன்ற புதிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இண்டர்நேஷனல் அளவில் நடக்கும்
போட்டிகளில் கலந்துகொண்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளையும்
குவித்துவருகிறார்கள் நமது வீரர்கள். போலவே, இந்த ஃபிரிஸ்பீ குழுவும் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கட்டும், வாழ்த்துகள்! இது இன்னும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்று நம்பலாம்.