சாண்ட்ராவிடம் பம்மிய வினோத்! #Biggboss Day 75

இந்த வினோத் ஏன் இவ்வளவு தூரம் சாண்ட்ராவுக்காக பயப்பட வேண்டும்? ’கனி இந்த மாதிரி மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார், வந்து கேளுங்க’ என்று சொல்லவேண்டியதை அப்படியே திரித்து...
Sandra and Vj Paaru
Sandra and Vj Paaru@jiohotstar
Published on

’பாட்டுப் பாடிய விஷயத்தில் என் மீது பழி போட்ட சாண்ட்ரா, என்னிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்று வீட்டுத்தலயான வினோத்திடம் கோரிக்கை வைத்தார் கனி. இதையெல்லாம் இப்படியே விட்டு விடக்கூடாதா அம்மா, நான் தலயா இருக்கும் வாரத்தில்தான் இப்படிப் பஞ்சாயத்துகள் வரவேண்டுமா, என் மண்டையை போட்டு உருட்டுகிறார்களே என்ற மைண்ட்வாய்ஸுடன் வினோத் போய் சான்ட்ராவை ஆலமரத்தடிக்குக் கூப்பிட்டார்.

’என்ன விஷயம்?’

’ஒண்ணுமில்ல, ஹவுஸ் மேட்ஸ்லாம் சேர்ந்து மீட்டிங் போடுறோம், நீங்களும் பெரிய மனசு பண்ணி வந்து அதில் கலந்துக்கணும்’

’ராத்திரி நேரத்துல என்ன மீட்டிங்கு?’

‘பெரியவங்க, கோச்சுக்கக் கூடாது’

‘சரி, என்ன விஷயம் சொல்லுங்க!’

’நீங்க வாங்களேன், சொல்றோம்’

’விசயத்தை சொல்லுங்க முதல்ல’

‘இப்ப நடந்துச்சில்ல, அந்த விஷயத்தை பத்திதான் பேசணும்’

’இப்ப என்ன விசயம் நடந்துச்சு?’

’அதுதான், அந்த விஷயம்தான்’

’அதாவது என் விஷயம்’

’ஆமாங்கம்மா’

’அதப்பத்தி யாரு பேசணும்? யார்கிட்ட பேசணும்?’

’அதாவது, உங்களுக்கு ஒரு பிரச்சனை நடந்ததுல்ல, அதப்பத்தி அங்க வந்து பேசுங்க’

Divya Ganesh
Divya Ganesh@Jiohotstar

இந்த வினோத் ஏன் இவ்வளவு தூரம் சாண்ட்ராவுக்காக பயப்பட வேண்டும்? ’கனி இந்த மாதிரி மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார், வந்து கேளுங்க’ என்று சொல்லவேண்டியதை அப்படியே திரித்து, ’கனி உங்கள பாட்டுப் பாடி கேலி பண்ணினாரே, அதில் உங்க பக்கத்தின் விளக்கத்தைச் சொல்ல உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு’ என்பது போல, திரித்துச் சொல்லி கூட்டிக்கொண்டு போகும் அளவுக்கு சாண்ட்ராவின் மீது அப்படி என்ன பயம் வினோத்துக்கு?

எல்லோரும் மரத்தடிக்கு வந்ததும் கனி தெளிவாக, ’இப்படி என் மீது பழி போட்டது தவறு, அநியாயம்! உனக்கு மட்டும்தான் குழந்தைகள் இருக்கிறார்களா, எனக்கும் இருக்கிறார்கள். இங்கே பலருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். உன் கற்பனைக்கு எல்லாம் நான் ஆளாக முடியாது. அப்படிச் சொன்னதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெளிவாக அவரது குற்றச்சாட்டை வைத்தார். ஆனால், சாண்ட்ரா இந்த வழக்கில் நமது பக்கம் வீக்காக இருக்கிறது, பேச ஆரம்பித்தால் மாட்டிக் கொள்வோம், குழப்பியடித்துவிட வேண்டியதுதான் என்று திட்டமிட்டு ’என்ன, கைய புடிச்சு இழுத்தியா’ ரேஞ்சுக்கு, ஒற்றை வார்த்தையில், ’ஆமா’ ’சரி’ ’முடியாது’ என்பது போல பதில் சொல்லி அனைவரையும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். மற்ற போட்டியாளர்களும், இதை எடுத்துச் சொல்லி சாண்ட்ராவை மன்னிப்பு கேட்கச் சொன்ன பிறகும், ’முடியாது’ என்று கல்லுளிமங்கி போல இருந்து கொண்டார். விஜய் சேதுபதி இருக்கும் போது அவருக்கென்ன கவலை?

பாரு, சாண்ட்ரா பேசிக்கொண்டிருந்தார்கள். ’சும்மா போய்க்கொண்டிருந்த என்னை, கமரு காதல் வலையில் விழ வைத்துவிட்டான். அதனால், இப்படி ஒரு கன்டென்ட்டாக ஆகிவிட்டது எனது நிலைமை. நான் மனதில் தோன்றுவதை அப்படியே பேசி விடுகிறேன். அதுவே, பின்னால் எனக்கு ஆப்பாக ஆகிவிடுகிறது என்று தோன்றுகிறது. அப்படியா சாண்ட்ரா?’

Thala Task for Next week
Thala Task for Next week@Jiohotstar

’அதிலென்ன சந்தேகம் உனக்கு? உனக்கு விரோதி வெளியே எங்குமில்லை. உன் வாய்தான் அது! உனக்கும் பிடித்திருக்கிறது என்றுதானே அவனிடம் அப்படிப் பழகினாய். பிறகு, திவாகரிடம் போய் அவனைப் பற்றியே தப்பாக பேசி இருக்கிறாய். இப்படியெல்லாம் யாராவது செய்வார்களா? இதெல்லாம் உன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறது’ என்று சாண்ட்ரா முகத்திலடித்ததைப் போல சொல்லிவிடவும், ’இவ வேற! ஆறுதலாக ஏதாவது சொல்லுவா என்று பார்த்தால், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுறா’ என்று நினைத்துக்கொண்டு, ‘அதை விடு. அது எதற்கு இப்போது!’ என்று சொல்லி, அவர் ஆரம்பித்த டாபிக்கை அவரே முடித்துக்கொண்டார்.

அடுத்து, டான்ஸ் மாரத்தான் போட்டியில் வென்றதால், ’குடும்பத்தினரை 24 மணி நேரம் உள்ளே இருக்க வைக்கும் வாய்ப்பு எனக்கு வேண்டும். இதில் கனியோ, ஆதிரையோ தலையிட்டால், நீ எனக்கு ஆதரவாகப் பேசி அந்த வாய்ப்பை எனக்கு வாங்கி தர வேண்டும். செய்வாயா?’ என்று கமருவிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ’உன் நல்லதுக்குதான் சொல்கிறேன், அதெல்லாம் உனக்கு செட் ஆகாது. எல்லாவற்றையும் வெளியே போய்ப் பேசிக்கொள். 24 மணி நேரம் எல்லாம் அவர்கள் உள்ளே இருந்தால் சரியாக வராது’ என்று எடுத்துச் சொன்னார் பாரு. ’ஏண்டா, எனக்கு இரண்டு, மூன்று மணி நேரம் எல்லாம் பத்தாது. அவ்வளவு வேலைகளைச் செய்து வைத்திருக்கிறேன். அதை எல்லாம் உட்கார்ந்து எங்க அம்மாவிற்கு விளக்க வேண்டுமானால் 24 மணி நேரமே பத்தாது. இதெல்லாம் உனக்கு புரிகிறதா, இல்லையா?’ என்று பாரு புலம்பினார்.

Aurora Sinclair and Aadhirai
Aurora Sinclair and Aadhirai@jiohotstar

நால்வரும் உட்கார்ந்து யாருக்கு அந்த வாய்ப்பு வேண்டும் என்று பேசி முடிவு பண்ணச் சொன்னார். பாரு, ஆதிரை, கனி அவர்கள் தரப்பைப் பேசிக்கொண்டிருக்க, அவர்களோடு சேர்ந்து கமருவும், எனக்கும் அந்த வாய்ப்பு வேண்டும் என்று பேசியதைப் பார்த்து ’நீயுமாடா?’ என்பது போல பார்த்தார் பாரு. கடைசியில் பேசி முடிவு செய்ய முடியாமல், அதிர்ஷ்ட கேம் விளையாடி ஒரு முடிவு செய்தார்கள். ஆதிரைக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு, முதலில் இந்த வாரம் ஆதிரை வெளியே போகாமலிருக்க வேண்டும்!

அடுத்து, பெஸ்ட், ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் வந்தது! பெஸ்ட்டாக, பலரும் கனியைச் சொன்னதும், பாருவும் மீட்டர் போட்டுக் கொள்வதற்காக கனியையே சொன்னார். பாரு கூட தன் எதிரியான கனியைச் சொன்னதைப் பார்த்து கடுப்பாகிக் கொண்டிருந்தது சாண்ட்ராவின் முகம். சாண்ட்ரா அவருக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த அமித்தையும், மீட்டர் போடும் நோக்கத்தில் திவ்யாவையும் சொன்னார். கடைசியில், பெஸ்ட்டாக கனியும், கமருவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒர்ஸ்ட்டாக, சாண்ட்ரா செய்த அட்டகாசங்களில் கடுப்பான பலரும் அவரைச் சொன்னார்கள். அமித், கூடவே இருந்த சாண்ட்ராவைப் போட்டுவிட்டது வியப்பாக இருந்தது. கடைசியில் சாண்ட்ராவும், வினோத்தும் தேர்வு செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஒர்ஸ்ட் பெர்ஃபார்மராக தன்னைச் சொன்ன திவ்யாவின் மண்டையைக் கழுவுவதற்கு கொஞ்ச நேரம் முயற்சி செய்து கொண்டிருந்தார் பாரு. ஆனால், அதற்கு வாய்ப்பளிக்காமல், பாருவைப் போலவே ஏறுக்குமாறாகப் பேசி, பாருவையே கடுப்பேற்றி அனுப்பிவைத்தார் திவ்யா.

அடுத்து பலூனை உடைக்கும், தல போட்டி நடந்தது. அதில், கமரு ஜெயித்தார்! போட்டியில்,விக்ரம் ஆர்வக்கோளாறில் எஃப்ஜேவின் காலை பிடித்து இழுத்து தவறு செய்து சொதப்பிவிட்டார். அதற்காக மன்னிப்புக் கேட்டபிறகும், அதை விடாமல், எஃப்ஜே, அவசியமேயில்லாமல் விக்ரமைத் தாளித்துக்கொண்டிருந்தார். அதில், அவருடைய வெஞ்சன்ஸ் சேர்ந்திருந்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது.

Puthuyugam
www.puthuyugam.com