தற்போது , ரயில் பயணங்கள் மேற்கொள்பவர்கள் ஏதாவது ஆபத்து என்றால், அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவார்கள். தேவையில்லாமல் அவசர சங்கிலியை பிடித்து இழுத்தால், ஆயிரம் அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை பெற கூட வாய்ப்பு உண்டு. இது, செல்போன் காலம். ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஜன்னலில் இருந்தோ அல்லது வாசலில் நின்று கொண்டே பயணிக்கும் போது, செல்போன் கீழே விழுந்து விட்டால், பதறிப் போய் அவசர சங்கிலியை பிடித்து இழுப்பது உண்டு. செல்போன் கீழே விழுந்த காரணத்துக்காக, அவசர சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்டனை அளிக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதே வேளையில், திருடர்கள் பறித்துச் சென்றால், அப்போது நாம் அவசர சங்கிலியைப் பிடித்து இழுக்கலாம். சரியான காரணத்துக்காக மட்டுமே அவசர சங்கிலியைப் பிடித்து இழுக்க வேண்டுமென ரயில்வே பாதுகாப்புப் படை உறுதிபட தெரிவித்துள்ளது.
சரி ...இனிமேல் ரயில் பயணங்களின் போது, செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? பதற்றமோ பயமோ கொள்ளாமல் ரயில்வே பாதுகாப்புப் படைக்கோ ரயில்வே போலீசுக்கோ தகவல் கொடுக்கலாம். செல்போன் தவறவிட்ட இடத்தில் வெளியே வரிசையாக
ரயில்வே ஹெல்ப்லைன் - 139
ரயில்வே பாதுகாப்புப் படை ஹெல்ப்லைன் - 182
கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன?
பயணித்த ரயில் எண்
தவற விட்ட இடம்
இருக்கை எண்
பயணியின் தனிப்பட்ட அடையாளங்கள்
இந்த தகவலை கொடுத்தால் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து , ரயில்வே பாதுகாப்புப் படையினர் செல்போனை மீட்பார்கள். பின்னர், உங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, ரயில் ஓடுபாதையில் வரிசையாக கம்பங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். தவறவிட்டதும் வெளியே பார்த்து கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணையும் கொடுத்தால் அந்த சுற்றுவட்டாரத்தில் தேட ரயில்வே ஊழியர்களுக்கு அடையாளமாக இருக்கும்.
தங்கச்செயின், பர்ஸ், மொபைல் போன்றவை திருடு போனால் மட்டுமே ரயில் பயணிகள் அவசர சங்கிலியை பிடித்து இழுக்க வேண்டுமென்றும் ரயில்வே நிர்வாகம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.
பலரும் ரயில்வே சட்டம் தெரியாமல் பதற்றத்தில் அவசர சங்கிலியை இழுத்து விடுவார்கள். இது உங்களை சிறைக்குக்கூட போக வைத்து விடும். அவசர சங்கிலி பயணிகள் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட வசதி என்றாலும், காரணம் சரியானதாக இருக்க வேண்டும். ஓடும் ரயிலில் டீ ,சமோசா வியாபாரிகள் கூட சில சமயங்களில் அவசர சங்கிலியை இழுத்து விட்டு இறங்கி ஓடி விடும் சம்பவங்களும் நடந்தது உண்டு. இந்த அவசர சங்கிலியை இழுப்பதால், ரயில் தாமதமாக செல்வதோடு, ரயில்வேக்கு நஷ்டமும் ஏற்படும். இந்த சங்கிலி ரயிலின் அவசர பிரேக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால், சில சமயங்களில் ரயில் தடம்புரளக் கூட வாய்ப்புண்டு. அப்படி, தடம் புரண்டால் சக மனிதர்களின் உயிருக்கும் நீங்கள் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
எந்தெந்த சந்தர்ப்பங்களில் அவசரசங்கிலியை பிடித்து இழுக்கலாம்?
1. ரயிலில் உங்களுடன் பயணித்தவர் அல்லது குழந்தைகள் காணாமல் போனால்.
2. ரயிலில் தீ பிடித்தால்.
3. ரயிலில் பொருட்கள் திருட்டு போனால்.
4. முதியவர்களோ அல்லது மாற்றுத்திறனாளிகளோ ரயிலில் ஏற தடுமாறிக் கொண்டிருக்கும் போது, ரயில் புறப்பட்டால்.
5. சக பயணிக்கு மாரடைப்பு போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டால்.
பொதுவாக, இந்த 5 காரணங்களும் ரயில் பயணத்தின் போது, அவசரசங்கிலியை இழுக்க சரியானவை.
ஒருமுறைக்கு மேல் அவசர சங்கிலியை பிடித்து இழுத்து பிடிபட்டால், அந்த நபருக்கு அதிக அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். DCRB எனப்படும் மாவட்ட குற்ற பதிவுத்துறைக்கும் உங்களைப் பற்றிய விவரங்கள் அளிக்கப்படும். இதனால், அரசுப் பணிகளில் சேர முடியாத நிலை கூட ஏற்படும்.