Suryakumar yadav lifting T20 World cup trophy Suryakumar Yadav
விளையாட்டு

"அடுத்தது ஒலிம்பிக் தங்கம்!" சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை! #losangelesolympic

உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணி, அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை குறி வைத்துள்ளதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

எம். குமரேசன்

ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் அடுத்தடுத்து இரு முறையை கோப்பையை வென்ற இந்திய அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை குறிவைத்துள்ளது.

நவீன கால ஒலிம்பிக் போட்டி 1986ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி ஏதென்ஸ் நகரில் முதன் முதலாகத் தொடங்கியது. இந்த போட்டியிலேயே, கிரிக்கெட்டைச் சேர்க்க திட்டமிடப்பட்டது. ஆனால், இங்கிலாந்து மட்டுமே, அப்போது தரமான கிரிக்கெட் அணியை கொண்டிருந்தது. இதனால், கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பில்லாமல் போனது. பின்னர், 1900ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீசில் நடந்தது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டும் இடம் பெற்றது. பங்கேற்ற அணிகள் பிரான்சும், இங்கிலாந்தும் மட்டுமே. இரு நாட்கள் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அதற்கு பிறகு, ஒலிம்பிக்கில் இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது. தற்போது , 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் டி20 பார்மட் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 6 ஆடவர் மற்றும் 6 மகளிர் அணிகள் இதில் பங்கேற்கப் போகின்றன.

ரேங்கிங் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு அணிகள் தேர்வு செய்யப்படலாம். ஆசிய பிரிவில் இருந்து இந்தியா, ஓசானியா பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்ரிக்க பிரிவில் தென்ஆப்ரிக்கா, ஐரோப்பிய பிரிவில் இருந்து ஒரு அணி, போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் அமெரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெறலாம். 6வது அணியை தேர்வு செய்யும் முறை குறித்து இன்னும் ஒலிம்பிக் கமிட்டி விளக்கமளிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து . வெஸ்ட் இண்டீஸ் அணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி 2028ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி முடிவடைகிறது. கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50கி.மீ தொலைவிலுள்ள தற்காலிக மைதானத்தில் நடைபெறுகின்றன. ஜூலை 12ம் தேதி மகளிர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி ஜூலை 20ம் தேதி முடிவடைகிறது. ஆடவர் ஆட்டங்கள் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஜூலை 28ம் தேதி முடிவடைகின்றன. அனேகமாக, லீக் முறைப்படி போட்டிகள் நடத்தப்பட்டு அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படலாம்.

los angeles olympics logo 28

இதுவரை, 25 ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளது. இவற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை மட்டுமே இந்தியா கைப்பற்றியுள்ளது. இதில், 10 தங்கப்பதக்கங்கள் அடக்கம். இந்த 10ல் 8 தங்கப்பதக்கங்கள் இந்திய ஆடவர் ஆக்கி அணி வென்றது. 1928ம் ஆண்டு ஆம்ஸ்ட்ராம் ஒலிம்பிக் முதல் 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் வரை , இந்திய ஆக்கி அணி 8 முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருந்தது. அதற்கு பிறகு, இந்திய ஆக்கி அணியாலும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாத சூழல் உருவாகி விட்டது. துப்பாக்கி சூடும் வீரர் அபிநவ் பிந்த்ரா 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2024ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற பிற இந்தியர்கள்.

ஒலிம்பிக்கில் முதன்முறையாக தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் மல்யுத்த வீரரான ஜே.டி. ஜாதவ் ஆவார். 1952ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் இவர், வெண்கலப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியா வெள்ளி, வெண்கலப்பதக்கங்களை ஏராளமாக வென்றாலும், தங்கம் வெல்வது மட்டும் சவால் மிகுந்ததாகவே இருந்துள்ளது. இதனால், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை குறி வைத்து விளையாடபோவதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

அமதாபாத்தில் நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வென்ற அவர் கூறுகையில், ''எங்களின் அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். அதில், தங்கப்பதக்கத்தை வெல்ல வேண்டும். அதே, ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் வெல்ல வேண்டும். இதுதான், எங்களின் இலக்கு... மறந்து விடாதீர்கள் ''என்று தெரிவித்துள்ளார்.