பள்ளிக்காதல், கல்லூரிக் காதல், பணியிடக் காதல்... இவற்றையெல்லாம் பற்றிக் கேள்விபட்டுள்ளோம். ஆனால், சிறைக் காதல் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா? அப்படியும் ஒரு காதல் உருவாகி கல்யாணத்தில் முடிந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவிலுள்ள அல்வார் (Alwar) பகுதியைச் சேர்ந்தவர் பிரியா ஷேத். மாடல் அழகியான இவருக்கு திக்ஷாந்த் கம்ரா என்ற காதலர் இருந்துள்ளார். திக்ஷாந்துக்கு ஏராளமான கடன் இருந்துள்ளது . கடனை அடைக்க முடியாமல் திணறியுள்ளார். தனது கடன் குறித்து, காதலி பிரியாவிடம் கூறிப் புலம்பியுள்ளார். கடன் பிரச்னைக்கு தீர்வு காண பிரியா ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி, டின்டர் ஆப்பில் துஷ்யந்த் ஷர்மா என்பவருடன் பழகுவது போலப் பேசி நடித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு மே 2ம் தேதி பாலாஜி நகரிலுள்ள வீட்டுக்கு ஷர்மாவை பிரியா அழைத்துள்ளார். வீட்டுக்குள் ஷர்மா வந்ததும், காதலர் கம்ரா மற்றும் அவரின் நண்பர் வாலியா ஆகியோர் உடனடியாக 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்து போன, ஷர்மா தந்தையிடம் இருந்து 3 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அவரை வெளிய அனுப்பினால் போலீசில் சிக்க வைத்து விடுவார் என்று பயந்து போனவர்கள், ஷர்மாவை கொலை செய்துள்ளனர். அதோடு, முகத்தை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைத்து, சடலத்தை அமெர் மலை பகுதியில் வீசி விட்டுத் தப்பி விட்டனர். அடுத்த நாள் ஷர்மாவின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது , பிரியா ஷேத் ஜெயிலுக்கு போன கதை!
இதே அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரசாத். இவருக்கு தன்னை விட 10 வயது முதிர்ந்த சன்டோஷ் என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இந்த பெண்ணுக்கு பன்வரிலால் என்ற கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இரவு நேரத்தில் பிரசாத்தை வீட்டுக்கு அழைத்த சன்டோஷ் , உறங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்ய கூறியுள்ளார். பிரசாத் கொஞ்சமும் யோசிக்காமல் கத்தியால் பன்வரி லாலின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். இந்தக் காட்சியை அந்த பெண்ணின் 3 குழந்தைகளும், பன்வரிலாலின் அண்ணன் மகனும் நேரில் பார்த்து விட்டனர். உடனே, தனது குழந்தைகள் மற்றும் கணவரின் அண்ணன் மகனையும் கொல்லும்படி சன்டோஷ் கூற, கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் 3 குழந்தைகள் மற்றும் அந்தச் சிறுவனையும் பிரசாத் கொலை செய்துள்ளார். ஒரே இரவில் 5 கொல்லப்பட்டனர். அல்வார் பகுதியில் நடந்த மிக மோசமான கொலை சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. இப்படித்தான், ஹனுமான் பிரசாத் ஜெயிலுக்கு சென்றார்.
விசாரணை முடிவில், இவர்கள் இருவருக்குமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருவரும் சங்கனீர் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 15 நாள்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. உயர்நீதிமன்றமும் பரோல் வழங்கியது. இதையடுத்து, ஜனவரி 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) அல்வார் நகரில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
பிரியா ஷேத்துக்கு பரோல் வழங்க அவரால் கொலை செய்யப்பட்ட , துஷ்யந்த் ஷர்மாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதே வேளையில், சிறை அதிகாரிகள் , ' ராஜஸ்தான் திறந்தவெளி சிறை விதிகள், 1972-ன் கீழ் மட்டுமே பரோல் வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள கைதிகளுக்குப் அவர்களுக்கு ஏற்ற மறுவாழ்வு அமைத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. அதனடிப்படையில், பரோல் வழங்கப்பட்டுள்ளது ' என்று தெரிவித்துள்னர்.