உலகின் ஒட்டுமொத்தப் பார்வையும் தற்போது கிரீன்லாந்து நாட்டின் மீது பதிந்துள்ளது. வட அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கு நடுவே அமைந்துள்ள தீவு நாடு இது . 21,66,086 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட உலகிலேயே மிகப் பெரிய தீவு இது. தமிழ்நாட்டைவிட 16 மடங்கு பெரியது. ஆனால், மொத்த மக்கள் தொகை 57,000 மட்டுமே. இந்தத் தீவில் 80 சதவிகிதம் எப்போதும் தடிமனான பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். கிரீன்லாந்தின் தலைநகரம் Nuuk என்பதாகும். 88 சதவிகித மக்கள் தலைநகர் மற்றும் பனி சற்று குறைந்த கடற்கரையோர நகரங்களிலேயே வாழ்கிறார்கள். மீன்பிடிப்பது பிரதான தொழில். டென்மார்க் அரசு ஏராளமான மானியத்தை கிரீன்லாந்து மக்களுக்கு வழங்குகிறது. இதைக்கொண்டே கிரீன்லாந்து மக்கள் அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்கிறார்கள். கிரீன்லாந்துக்கு என்று தனியாக ராணுவம் கிடையாது. நேட்டோவிலும் உறுப்பினர் இல்லை. டென்மார்க் நாட்டின் பாதுகாப்பில்தான் கடந்த 300 ஆண்டுகளாக இந்தத் தீவு இருக்கிறது. கிரீன்லாந்து வட அமெரிக்க கண்டத்தில் இருக்கிறது. அங்கிருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டென்மார்க் வசம் கிரீன்லாந்து சென்றது எப்படி... என்கிற கேள்வி இங்கே எழுகிறது அல்லவா? அதற்கு பதில் என்னவென்று பார்க்கலாம்.
ஆண்டாண்டு காலமாக இந்தத் தீவு தனிமைப்படுத்தப்பட்டு கிடந்தது. ஸ்கான்டிவிடியன் நாடுகளான நார்வே, டென்மார்க், ஸ்வீடன் நாடுகளில் வாழும் தி நோர்ஸ் (The Norse)என்ற இன மக்கள்தான் இங்கே குடியேறி வாழ்ந்தனர். அதிக குளிர் காரணமாக இந்த மக்களுக்கு வாழ்நாளும் கம்மிதான். தி நோர்ஸ் மக்கள் ஸ்கான்டிவிடியன் பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால், 1721ம் ஆண்டு நார்வே மன்னர் ஹேன்ஸ் எஜ்டே (Hans Egede) என்ற கிறிஸ்தவ பாதிரியாரை கிரீன்லாந்துக்கு அனுப்பி வைத்தார். அங்கே வசிக்கும் மக்களின் நிலை என்ன ... என்பதை கண்டறிந்து சொல்லவே இந்த பாதிரியார் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார். இவர்தான் ,கிரீன்லாந்துக்கும் நார்வே நாட்டுக்குமிடையே மீண்டும் தொடர்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, ஏராளமான நோர்ஸ் இன மக்கள் இங்கே குடியேறத் தொடங்கினர். அப்போது, டென்மார்க், நார்வே நாடுகள் ஒருங்கிணைத்து இருந்தன. பின்னர், 1814ம் ஆண்டு நார்வேயில் இருந்து டென்மார்க் உடைந்தது. இந்த சமயத்தில் டென்மார்க் கிரீன்லாந்தை தன் வசப்படுத்தியது. பல சட்டப் போராட்டங்கள் நடத்தி கிரீன்லாந்து மீதான உரிமையை நிலை நாட்டியது.
இப்போது, கிரீன்லாந்துக்கு டென்மார்க் நாடாளுமன்றத்தில் இரண்டு எம்.பி தொகுதி உள்ளது. டென்மார்க்கிடம் இருந்து பிரிந்து சுதந்திரமாக வாழ விரும்பினாலும், இந்த நாட்டின் பனி சூழ்ந்த இயற்கைச் சூழல் காரணமாகத் தனியாகப் பொருளாதாரத்தை கட்டமைத்துவிட முடியாத நிலை இருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு டென்மார்க்கிடம் இருந்து தனியாகப் பிரிய, கிரீன்லாந்து மக்களிடத்தில் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், கிரீன்லாந்து மக்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். இதனால், இன்று வரை டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து இருந்து கொண்டிருக்கிறது. ராணுவம், கடலோரப் பாதுகாப்பு, சட்டத்தை அமல்படுத்தும் உரிமை டென்மார்க்கிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு , 600 மில்லியன் டாலர்களை கிரீன்லாந்து மக்களுக்காக டென்மார்க் செலவழிக்கிறது. இதன் காரணமாக, இந்த மக்கள் ஓரளவுக்கு நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கிரீன்லாந்து மீது அமெரிக்கா குறி வைக்க பல காரணங்கள் உள்ளன. அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது. இங்கே, Golden Dome போன்ற ஏவுகணை தடுப்பு அமைப்புகளை அமைத்து விட்டால், வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் ஏவும் ஏவுகணைகளை வட துருவத்திலுள்ள கிரீன்லாந்திலேயே தடுத்து விடலாம் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. விண்வெளி ராக்கெட்டுகள், ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க உதவும் கனிமங்கள் கிரீன்லாந்தில் கொட்டிக் கிடக்கிறது. இவற்றை வாங்க அமெரிக்கா சீனாவிடம் கையேந்தும் நிலை உள்ளது. எனவே, கிரீன்லாந்தை வளைத்து விட்டால், கனிமவளத்தில் தற்சார்பு பெற்றுவிடலாம் என்பதும் அமெரிக்காவின் எண்ணம். கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவையும் கிரீன்லாந்தில் தாரளமாக கொட்டிக் கிடக்கிறது
இதன் காரணமாகவே, கிரீன்லாந்தை தன் வசம் கொண்டு வர அமெரிக்க போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், டென்மார்க் தனது பிடியை விடாது போல தெரிகிறது. கீரீன்லாந்து மக்களும் அமெரிக்காவுடன் இணைய விரும்பவில்லை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரீன்லாந்து மக்களிடத்தில் அமெரிக்காவுடன் இணைவது குறித்து வாக்கெடுப்பு நடந்து வருகிறது. அதில், 6 சதவிகித கிரீன்லாந்து மக்கள் மட்டுமே அமெரிக்காவுடன் இணைய சம்மதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.